மனித நேயத்தை ரமழான் நோன்பு போதிக்கின்றது

10.04.2024 07:53:36

”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரமழான் நல்வாழ்த்துக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.

மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமழான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரமழான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

எளியோர்க்கு ஈந்து நோன்புக் கடமைகளை நிறைவேற்றி, ரமழான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும்  எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.