பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

01.05.2025 08:08:56

டீசல் விலையானது குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை மாற்றியமைக்கப் போவதில்லை என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நேரத்தில் பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.

விலைச் சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மாறாக நாங்கள் செயல்படவில்லை.

எனவே, இந்த நேரத்தில் பஸ் கட்டணத்தைக் குறைப்போம் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது.

எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல என்றும் குறிப்பிட்ட அவர், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

முச்சக்கர வண்டி கட்டணம்

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் கட்டணங்களை மாற்றியமைக்கப் போவதில்லை என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவற்றின் எரிபொருள் விலைகளை குறைக்கப்பட்டன.

அதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை லிட்டருக்கு 06 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.293 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லிட்டருக்கு 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.341 ஆகவும் திருத்தம் செய்யப்பட்டது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லிட்டருக்கு 12 ரூபாவால் குறைந்து ரூ.274 ஆகவும், சூப்பர் டீசல் லிட்டருக்கு 6 ரூபாவால் குறைந்து ரூ.325 ஆகவும் இருந்தது.
இதற்கிடையில், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 5 ரூபாவால் குறைந்து ரூ.178 ஆக உள்ளது.