2025 வரை குறைவாக உண்ணுங்கள் மக்களே வடகொரிய அதிபர் அறிவுரை

28.10.2021 15:14:54

 வடகொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைந்த அளவில் உணவு உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். அந்நாட்டில் ஒரு கிலோ வாழைப்பழம் 3,000 ரூபாய்க்கு மேல் விற்கும் அளவுக்கு உணவு பஞ்சம் நிலவுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

வடகொரியாவுக்கு சீனாவில் இருந்துதான் பல்வேறு உதவிப்பொருட்கள் வந்து கொண்டு இருந்தன. அவற்றுக்கும் தடை விதித்தார். இதன் காரணமாக பொருட்கள் வருவது தடைப்பட்டது. குறிப்பாக விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாய கருவிகள் போன்றவையும் வரவில்லை.

இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உணவு உற்பத்தி பல மடங்கு குறைந்துள்ளது. வடகொரியாவுக்கு உணவு பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகளை விநியோகிக்கும் முக்கிய நாடான சீனாவின் எல்லையை கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மூடியதே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியது.

வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தியில் இலக்கை எட்ட முடியவில்லை என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். அணு ஆயுத சோதனை காரணமாக பல நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடையும் விதித்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவு மக்களை மேலும் வதைப்பது போல் உள்ளதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.