அமெரிக்காவை பின்தொடரும் ஸி ஜின்பிங்!

04.01.2021 09:10:10

 

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தலைமையில், இயங்கும் சீன இராணுவத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் அங்கு இராணுவ சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தங்கள் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது என ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் ‘சவுத் சீனா மோர்னிங் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 26ஆம் திகதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தங்கள், ஜின்பிங் தலைமையில் நாட்டின் இராணுவ தலைமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், புதிய இராணுவ தொழில் நுட்பங்கள், இணைய பாதுகாப்பு, விண்வெளி, மின் காந்தவியல் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் பங்கேற்பதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களையும், தனியார் நிறுவனங்களையும் அணி திரட்டுவதற்கான நாடு தழுவிய ஒருங்கிணைப்பு முறையை உருவாக்குவதின் அவசியத்தை புதிய சட்ட திருத்தங்கள் வலியுறுத்துகின்றன.

67வயதான ஸி ஜின்பிங், நாட்டின் ஜனாதிபதி என்பதோடு மாசேதுங்குக்கு பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமை வாய்ந்த தலைவராக திகழ்கிறார். கட்சியன் பொதுச்செயலாளர் பதவியையும் வகிக்கிறார். இராணுவத்துக்கு அவர்தான் தலைவர். இவை அனைத்தும் அவர் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்க துணை நிற்கும் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்க இராணுவத்துக்கு சமமாக சீன இராணுவத்தை 2027ஆம் ஆண்டுக்குள் அதிநவீனமாக கட்டமைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முடிவு எடுத்த நிலையில், இந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.