புதுவை மாநில 12 மீனவர்கள் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

08.07.2022 10:46:58

வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேட்டை சேர்ந்த கணேசன் (வயது 52), வைத்தியநாதன் , ராமன் உள்ளிட்ட 5 பேரும், மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரா (27), தினேஷ் (26), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (44), விக்னேஷ் (22), ஜெகதீஸ் , சந்தீஸ்குமார், பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த 1-ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கட்சி தலைவர்களும் உடனடியாக தமிழக மீனவர்களை விடுதறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று மதியம் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தனர். இதையடுத்து விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீனவர்கள் 12 பேரும் இன்று மாலை அல்லது நாளை அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வர உள்ளனர். அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வர். மீனவர்கள் விடுதலையானதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.