இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி - தென்னாபிரிக்கா !

23.07.2021 10:29:45

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

பெல்பாஸ்ட் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் மில்லர் 75 ஓட்டங்களையும் முல்டர் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டெயர்லிங் மற்றும் மார்க் அடாயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிரைஜ் யங், ஜோசுவா லிட்டில் மற்றும் சிமி சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அயர்லாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷேன் கெட்கேட் 24 ஓட்டங்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், போர்ச்சுன் மற்றும் டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் பியூரன் ஹென்ரிக்ஸ் 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் ஹெய்டன் மார்கிரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேவிட் மில்லர் தெரிவுசெய்யப்பட்டார்.