இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உலக தடகள இறுதி போட்டிக்கு முன்னேறினார்

22.07.2022 12:55:14

முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு வெளியேறி இருந்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.