நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி

21.10.2021 10:17:53

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலமாகும். அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கான இடங்களாக இருப்பதால் ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
 

இந்நிலையில், நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.


இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு, மண்ணாக புதைந்தன. கிராமங்களுக்கு இடையிலான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இதற்கிடையே கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 30-க்கும் அதிகமானோர் மாயமாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.