
சுதீப்பை இயக்கும் வெங்கட் பிரபு
சிம்பு நடிப்பில் மாநாடு என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மாநாடு படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மாநாடு படம் திரைக்கு வந்தது தனது புதிய படத்தை தொடங்குகிறார் வெங்கட்பிரபு. அந்த படத்தில் கன்னட நடிகர் சுதீப் நாயகனாக நடிக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம். சுதீப் நடிக்கும் இந்த படம் அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று ஒரு ஆக்சன் கதையில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.