ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை

16.09.2021 12:26:41

ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின் மீட்பு பணியாளர்கள் மற்றும் 2017-ல் நைஜரில் அமெரிக்க படையினர் மீது நடந்த தாக்குதலில் ஷராவிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஷகாராவில், கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பை நிறுவிய ஷராவி, மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஷகாராவில், பிரான்ஸ் அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அ திபர் மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இது மிகப்பெரிய வெற்றி எனவும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.