நீதிக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

20.06.2025 14:00:00

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்த பட வேண்டும் மற்றும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில்  இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செம்மணியில் வெள்ளிக்கிழமை (20) காலை  நடைபெற்றது.

“இலங்கை அரசே,  படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின்  நீதியை கோருகின்றோம்” எனும் தொனிப்பொருளில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது, “ நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும்”, “இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம்” , “ஐநா செவி கொடு”, “ஜனாதிபதி கண்விழி”, “மனித உரிமையை பாதுகாப்பீர்”, “புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள்” ,“விசாரணையை துரிதபடுத்து” ,“செம்மணிக்கா ஒரு நீதி, பட்டலந்தவுக்கு ஒரு நீதியா” ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பினர் பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழி பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது.