பயம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்யுங்கள் - ராகுல்காந்தி அழைப்பு !

03.11.2021 10:03:05

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

13 மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஓரளவு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 8 சட்டசபை தொகுதிகளும், ஒரு எம்.பி. தொகுதியும் கிடைத்துள்ளது. இவ்வளவு காலமும் தோல்வியையே பிரதானமாக கொண்டு இருந்த காங்கிரசுக்கு இது ஒரு ஆறுதலாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அது காங்கிரசுக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள சில வெற்றி காங்கிரசுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது சம்பந்தமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. அனைத்து வெற்றிகளையும் தொண்டர்களின் வெற்றியாக கருதுகிறோம். எந்தவித அச்சமும், வெறுப்புணர்வும் இல்லாமல் தொடர்ந்து தொண்டர்கள் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா வெளியிட்டுள்ள செய்தியில், “3 எம்.பி. தொகுதிகளில் 2 தொகுதிகளை பா.ஜனதா இழந்துள்ளது. இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மராட்டியம் ஆகியவற்றில் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதியதில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

மோடி ஆட்சியை விட்டு வெளியேறும் காலம் வந்து விட்டது. அவர் கொண்டு வந்த கறுப்பு சட்டங்களை திரும்ப வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாசில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறி உள்ளார்.