வட்டாட்சியர் உத்தரவு!
|
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான போட்டோ இணையத்தில் பரவி வரும் நிலையில், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் இந்த உத்தரவை கண்டித்து வருகிறார்கள். தமிழகத்தில் இப்போது விஜய் தலைமையிலான தவெக அரசு நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் அரசில் பங்கெடுத்துள்ளன.
|
|
இந்த கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் தரப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை என்றாலும் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறது. அப்படியிருக்கும் போது இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்த உத்தரவை பிற்பபித்துள்ளதாக தெரிகிறது. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தகவல்கள் வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு இந்த உத்தரவு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள நபர்களின் பெயர் மற்றும் முகவரியை சேகரித்து, வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சேகரிக்கும் பணியில் அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிக்கத் தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை குறித்த போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அரசியல் கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரியை அரசு அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவுக்கு திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஆர். சச்சிதானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைரேகை சட்டம் அமலில் இருந்த காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தளவுக்கு வட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா? மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா? பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 to 1 மணி வரை மட்டுமே எனவும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்!" என்று தனது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். |