மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசீர்வாதம்.

06.11.2025 14:17:00

திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார் பிரியாமணி. 

தற்போது தமிழில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரியாமணி, ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' என்ற படத்தில் விக்ரமின் தங்கை வேடத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தமிழ் சினிமாவை பொருத்தவரை பருத்தி வீரனில் நான் நடித்த முத்தழகு கேரக்டர் இப்போதுவரை மக்கள் மனதில் நிற்கிறது. அதனால் அது போன்று அழுத்தமான வேடங்களில் நடிப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் பிரியாமணி. 

அத்துடன் ''மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தால், அது என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். 

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுவேன். குறிப்பாக மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகைகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்'' என்று தெரிவித்துள்ளார் பிரியாமணி.