தெய்வேந்திரமுனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறைமுனை வரை அபிவிருத்தி திட்டங்கள் ;நாமல் உறுதி

10.09.2021 05:30:45

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்

நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதைய கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன குறிப்பாக நீங்கள் ஒன்றை பார்த்துக்கொள்ள முடியும் தற்போது யாழ் மாநகர சபைக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது அது பல மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு வருகின்றது

அதுபோல பல் வேறுபட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்றன எனவே தற்போதைய அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது

எனினும் தற்போது எமக்கு பிரச்சனை ஒன்று காணப்படுகின்றது இந்த கொரோனா வைரஸ் என்ற ஒரு பிரச்சினை எனினும் அந்த கொரோனா வைரஸ் என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தோடு இந்த அபிவிருத்தியினையும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது

அதோடு தற்போது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாக எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தலைமையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலைஅதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் யாழ் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தற்போது சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதற்கு காவற்துறையினர் தயாராக உள்ளார்கள் எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அந்த வன்முறை சம்பவம் தொடர்பில் உரிய காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் மூலம் குறித்த வன்முறைச் சம்பவங்களோடு தொடர்பானவர்களை கைது செய்து கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.