தமிழரசை ஆதரிக்க வேண்டியது தார்மீக கடமை.

19.06.2025 10:18:00

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்கள் கூறி இருந்தோம்.

இத்தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் கூறியிருந்தோம்.

பல கட்சிகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 35 சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றன. அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.

இந்த கோட்பாட்டிற்கு இணங்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலே செயற்பட்டிருக்க வேண்டும்.

மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்.