வெடுக்குநாறி சம்பவம் - பக்கச்சார்பற்ற விசாரணைக்கு சஜித் கோரிக்கை!

19.03.2024 07:53:44

வவுனியாவில் உள்ள இந்து ஆலயமொன்றில் வழிபாடுகளை மேற்கொண்ட இளைஞர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். 

இந்நாட்டில் மத சுதந்திரம் என்பது தெற்கில் உள்ளதைப் போலவே வடக்கில் உள்ள மக்களுக்கும் அதே உரிமை உண்டு. இந்த சுதந்திரம் மனித மற்றும் அடிப்படை உரிமை என்பதால் இந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள இந்து ஆலயமொன்றில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கு போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது ஒருவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளாகும். விகாரையாக இருந்தாலும், பள்ளியாக இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், எந்த மத வழிபாட்டு இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள உரிமை உள்ளது. இந்த மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.