பிரதமராகிறாரா கோட்டாபய..!

09.09.2022 15:18:00

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது எனவும் இந்த ஆட்சியில் அரசியல் சூழ்ச்சிக்கு ஒருபோதும் இடமில்லை எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க ஆளும் தரப்புக்குள் சிலர் சூழ்ச்சி செய்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் வதந்தி.

அதிபரின் விருப்பத்துடனும் ஆளும் கட்சியின் பெரும்பான்மைப் பலத்துடனும் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன். இது நான் தேடிச் சென்று பெற்ற பதவி அல்ல. இந்தப் பதவி என்னைத் தேடியே வந்தது.

கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்

பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கத் திரைமறைவில் எந்தச் சூழ்ச்சியும் இல்லை. எவரினதும் அழுத்தமும் எனக்கு வரவும் இல்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஏகோபித்த ஆதரவுடன் தான் நான் பிரதமர் பதவியை வகிக்கின்றேன்.

நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் எனவும், பிரதமராகப் போகின்றார் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.