மனிதாபிமான திட்டம் நிறைவு ஐ.நா.

11.06.2026 08:43:50

2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’  சூறாவளி, அண்மைக்கால வரலாற்றில் கண்டிராத மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது. உச்சகட்ட பாதிப்பின்போது, நாட்டின் 25 மாவட்டங்களிலும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்; இதில் 522,000 சிறுவர்களும் அடங்குவர். 2026-ஆம் ஆண்டு ஜனவரி நிலவரப்படி, 640-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் மனிதாபிமானக் கூட்டமைப்புகள் கடந்த 2025 டிசம்பர் 11-ஆம் திகதி ‘மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை’   ஆரம்பித்தன. அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில், சர்வதேச உதவிகளை அவசர தேவைகளுக்கு நேரடியாகச் சென்றடையச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு

தற்போது இத்திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 25 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மிக மோசமான நிலையில் உள்ள 575,000 பேருக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காகத் தேவைப்பட்ட 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 28.5 மில்லியன் டொலர்கள் நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்பட்டன. இலங்கை மக்கள் மீதான நம்பிக்கையையும், சர்வதேச சமூகத்தின் ஒற்றுமையையும் இது வெளிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியா, ஐ.நா. அவசர கால உதவி நிதியம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, கேட்ஸ் அறக்கட்டளை, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, கொரியா, சைப்ரஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இதற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. மேலும், யுனிசெஃப் (UNICEF), எஃப்.ஏ.ஓ (FAO), உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), யுனெஸ்கோ (UNESCO) மற்றும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் (UNDP) போன்ற அமைப்புகளும் நிதி உதவிகளை வழங்கின.

பாதிக்கப்பட்டோரின் குரல்

பதிக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்குப் பின்னால் பல சோகக் கதைகள் உள்ளன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலிஸ் நோனா, தனது மூன்று குழந்தைகளுடன் இருந்தபோது சூறாவளியால் வீட்டை இழந்தார். "எல்லாம் அழிந்துவிட்டது, ஒரே நாளில் வீடற்றவர்களானோம்" என்று கூறும் அவர், மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் (HPP) ஊடாகக் கிடைத்த பண உதவி, தங்களின் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

கூட்டுப் பொறுப்பு

இத்திட்டம், இலங்கை அரசாங்கத்தின் தேசிய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 83 கூட்டாளர் அமைப்புகள், வெளிவிவகார அமைச்சு, இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி, அரசு வழங்கும் உதவிகளுக்குப் பக்கபலமாக இருந்தன.

"தேசிய தலைமைத்துவம் வலுவாக இருக்கும்போது, உள்ளூர் உரிமைகள் மதிக்கப்படும்போது, கூட்டுப் பங்களிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் விரைவாகவும் நேர்மையாகவும் உதவ முடியும்" என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) குறிப்பிடுகையில், "இலங்கை இந்த மாபெரும் பேரழிவை ஒருபோதும் தனித்து எதிர்கொள்ளவில்லை. மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணங்கள் கிராமப்புறங்கள் வரை நேர்த்தியாகக் கொண்டு செல்லப்பட்டன. மீட்சிக்கான பாதை நீண்டது, அந்தப் பாதையின் ஒவ்வொரு அடியிலும் அரசாங்கத்துடனும் மக்களுடனும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்" என்று உறுதி அளித்தார்.

மீட்சியும் எதிர்காலமும்

மனிதாபிமான உதவிகள் நிறைவடைந்தாலும், மீட்புப் பணிகளின் தேவை அதிகரித்துள்ளது. பேரழிவிற்குப் பின்னரான தேவைகள் மதிப்பீட்டின்படி (PDNA), மீட்சி மற்றும் புனரமைப்பிற்கு 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. சுமார் 113,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இடைக்கால தங்குமிடங்கள் மற்றும் நிரந்தர வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனர்த்தத் தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக முதலீடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எதிர்காலத்தில் இத்தகைய சூழல்களை எதிர்கொள்ளும் வலுவான சமூகத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும்.