சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு!

24.08.2026 14:00:00

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டணியில் ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணி உருவாகியுள்ளது. சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து “மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை” (Mecca Agreement for Mutual Defense) எனப்படும் ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 7-ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன.

   

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளில் எதனையும் தாக்கினால் அது மற்ற நாடுகளையும் தாக்கியதாகக் கருதப்படும்.

இப்போது, இந்த கூட்டணியில் ஈரானையும் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்மயாதீன் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பாராளுமன்றத்தின் “Khaneh Mellat” செய்தி முகமைத் தலைவர் மெஹ்தி ரஹிமி, “ஈரானுக்கு அழைப்பு வந்துள்ளது, அது பரிசீலனையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆனால், இதுவரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அல்லது சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த கூட்டணியை நேட்டோ (NATO) உடன்படிக்கையின் Article 5-உடன் ஒப்பிட்டு, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான், “இது ஈரானுக்கு எதிரானது அல்ல, எந்த நாட்டையும் குறிவைத்து செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூன்று நாடுகளும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தலைவர்கள் இடையே சந்திப்புகள், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

மேலும், கூட்டணியை விரிவுபடுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், எகிப்து போன்ற நாடுகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அழைப்பின் மூலம், பிராந்தியத்தில் “பாதுகாப்பு குடை” (Regional Security Umbrella) உருவாக்கும் முயற்சி வலுப்பெறுகிறது.

ஈரான் நீண்ட காலமாக பிராந்திய பாதுகாப்பு அமைப்புகளை ஆதரித்து வந்ததால், இந்த அழைப்பு அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.