வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் மீள ஆரம்பம்!

30.09.2021 05:54:03

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது
கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை முன்னெடுக்க முடியும். மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன்.

எனவே அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் உள்ள நிலையில் ஆரம்ப பாடசாலைகளை திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும் என்றார். இதேவேளை தென் மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகள் ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.