பாஜகவிடம் நெருங்குகிறதா திமுக?
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதியதொரு திருப்பமாக, திராவிட முன்னேற்ற கழகத்திடம் ஆதரவு கோர பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நகர்வு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வர விரும்பும் முக்கிய மசோதாக்களான தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தி.மு.கவிடம் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பு, தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க தனித்துவிடப்பட்டுள்ள சூழல் நிலவுகிறது. இந்த அரசியல் தனிமையை பயன்படுத்திக் கொண்டு, அக்கட்சியின் ஆதரவை திரட்டுவதில் பா.ஜ.க தலைமை தற்போது தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் முக்கிய திட்டங்களுக்கு இதுவரை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்த தி.மு.க, தற்போதைய அரசியல் சூழலில் என்ன மாதிரியான முடிவை எடுக்க போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த வியூகம் தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.