உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 62 பேரும் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டனர்

05.08.2021 09:00:00

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 62 பேரையும் பலத்தபாதுகாப்பு மத்தியில் கடந்த 10 மாதத்திற்கு பின்னர் இன்று வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19 திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த  63 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில்  அவர்களில் இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 56 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்

இந்த 56 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 6பேர் உட்பட  62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் குறித்த  வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 62 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை கடந்த 2020-10-15ம் திகதி நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பாடது காணொளி மூலம் அவர்களின் வழக்கு விசாரணையில் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வந்தனர் 

இந்த நிலையில் கடந்த 10 மாதத்திற்கு பின்னர் இன்று வியாழக்கிழமை (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 7 பஸ்வண்டிகளில் அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 19 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது