170 தொகுதிகளில் இறங்குவது யாரெல்லாம்?
|
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியின் வியூகங்களுக்கு போட்டியாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசும் நிகழ்வு, தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
|
வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, ஒருபுறம் திமுகவை வீழ்த்துவதில் குறியாக இருந்தாலும், அதிமுக தனது மேலாதிக்கத்தை தக்கவைத்து கொள்வதில் மிக உறுதியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 170 இடங்களில் அதிமுக நேரடியாகக் களம் காண வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் பிரதான திட்டமாக உள்ளது. எஞ்சிய இடங்களை மட்டுமே பாஜக, பாமக மற்றும் அமமுக போன்ற தோழமை கட்சிகளுக்குப் பிரித்து வழங்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக, பாஜக தரப்பில் 30 தொகுதிகளும், பாமக தரப்பில் 17 தொகுதிகளும் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இடப்பங்கீடு தொடர்பான இழுபறிகளைத் தீர்க்கவே இந்த டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டைத் தாண்டி, சின்னம் தொடர்பான விவகாரமும் தற்போதைய கூட்டணியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்த துவங்கிவிட்டது. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளைத் தங்களது தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்து, தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி பாஜக விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு நேர்மாறான ஒரு வியூகத்தை வைத்துள்ளார். அதாவது சின்ன கட்சிகள் அனைத்துமே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே கிராமப்புற வாக்குகளை எளிதாக கவர முடியும் என்பதும், அதுவே வெற்றியை உறுதி செய்யும் என்பதும் எடப்பாடியின் உடும்புப்பிடி வாதமாக இருக்கிறது. எனினும் எடப்பாடி பழனிசாமியின் இந்த டெல்லி சந்திப்பு வெறும் தொகுதி பங்கீடு சார்ந்ததாக மட்டுமே எடுத்து கொள்ள முடியாது. இது அதிமுகவின் தனித்துவத்தை தக்கவைப்பதற்கான ஒரு போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த காலத் தேர்தல்களில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, அதிக இடங்களில் போட்டியிடுவது அதிமுகவிற்கு உடனடி அவசியமாகிறது. பாஜக - அதிமுக அதே சமயம், தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக, தனது நிபந்தனைகளில் எவ்வளவு தூரம் இறங்கி வரும் என்பதைப் பொறுத்தே இந்தக் கூட்டணியின் பலம் அமையும்.. அதேபோல சிறிய கட்சிகள் எந்த சின்னத்தைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதுதான் வரும் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான பலத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக்கூடும். இன்று நடைபெறவுள்ள அமித் ஷாவுடனான சந்திப்பின் முடிவில், பல வாரங்களாக நிலவி வரும் முரண்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி எண்ணிக்கை மற்றும் சின்னம் குறித்த இறுதி ஒப்பந்தம் இன்று எட்டப்படலாம் என்பதால், அரசியல் வட்டாரங்கள் அனைத்தும் இன்று டெல்லியை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளன. இந்த சந்திப்பின் முடிவுகள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அம்சமாக அமையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதனால்தான், டெல்லியில் இருந்து நல்ல செய்தி வருமா என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்களாம்! |