வட பகுதி கடல்வளத்துறை திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்....

04.07.2021 09:00:00

 

இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம் இறக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் வடபகுதி கடல்வளம் அந்நியரால் விழுங்கப்பட வடபகுதி மீனவர்களோ பிச்சைப்பாத்திரம் ஏந்தும் பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தென்னிந்திய திராவிடர்கள்

தென் இந்திய திராவிடர்கள் ,அழிவை ஏற்படுத்துகின்ற இழுவைமடியினை( bottom trawl net) பாரிய இயந்திரப்படகுள் கொண்டு பாக்கு நீரிணை,பாக்கு குடாப்பகுதிகளை ஆக்கிரமிக்க ,தூத்துக்குடி மீனவர்கள் இராட்சத படகுகள் கொண்டு மன்னார் குடாக்கடலையும்(Gulf of Mannar) ஆக்கிரமிப்புச் செய்து அங்குள்ள வளங்களை எதுவித எதிர்ப்புமின்றித் தாராளமாகச் சூறையாடிச் செல்லுகின்றனர்.

சிங்கள மீனவர்கள்

மறு புறமாக சிங்கள மீனவர்கள் கிழக்கே வங்காள விரிகுடாக்கடலில் பலநாட் கலங்கள் கொண்டு பேதுரு( pedro bank) மீன்பிடித்தளம் சார்ந்த பகுதிகளையும்,மன்னார் கரையோரமாக தலைமன்னார் முதல் முள்ளிக்குளம் ஈறாக உள்ள நீண்டநாள் கரையோரப் பகுதிகளையும்,முல்லைத்தீவிலே கொக்கிளாய், நாயாறு ஏரிகளையும் ஆக்கிரமித்துள்ளதுடன் அங்குள்ள கரைவலைப்பாடுகளையும், தம்வசப்படுத்தியுள்ளனர். யாழ்குடாவில் மைலிட்டித் துறைமுகத்தினையும் ஆக்கிரமித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்புடன் வளங்களை வகைதொகையின்றி அள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.அத்துடன் போர்க்காலத்தில் ஆக்கிமிக்கப்பட்ட வலிவடக்கின் பெரும்பகுதி இன்னமும் உரியவர்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை.மாறாக அப்பகுதிகளில் படைத்தரப்பினர் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடடிப்பதாக விவசாயிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.அரசோடு ஒட்டி உறவாடும் தமிழ் அமைச்சர்களுக்கு கொக்கிளாய் நாயாறு, வலிவடக்கு இது குறித்து கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சீன மீனவர்கள்

இந்தத் தொல்லைகள் போதாதென்று எஞ்சிய கரையோர ஏரிப்பகுதிகள் வளர்ப்பு பண்ணைகளுக்காக சீனர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

 

தெற்கு ஊடாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கடலட்டையின் உற்பத்தி பூநகரி முதல் மன்னார் வரையிலான கடற்பிரதேசத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக் குறித்த கரையோரப் பிரதேசமானது ஆழம் மிக குறைவானதும், சேற்றுப்பகுதியாகவும் கண்டல் காடுகளையும், வற்றுப்பெருக்கு மேடுகளைக் கொண்டதுமான வளமிக்க ஓர்பகுதியாகும்.கடலட்டை,இறால்,பச்சை நண்டு (green crab) வளர்ப்பிற்கான மிகச்சிறந்த சமுத்திரச் சூழலைக் கொண்ட ஓர் பகுதியாகும்.இப்பகுதி நீரில் வளர்ப்பிற்காக முழுமையான பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை.மூலதனப் பற்றாக்குறை, வளர்ப்பிற்கான தொழில்நுட்பம் இன்மை, ஆளணிப்பற்றாக்குறை, நிறுவனரீதியான ஆதரவின்மை,அரச ஆதரவின்மை, போன்ற பல்வேறு காரணிகளால் உள்ளூர் மீனவர்களால் இத்தகைய நீரில் வளர்ப்பினை நல்ல முறையில் வெற்றிகொள்ளமுடியாதநிலை காணப்படுகின்றது.இதனால் இப்பகுதி உள்ளுர் முகவர்களின் உதவியுடன் தென்பகுதி முதலீட்டாளர்களினால் இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு விடுகின்றன.

இவ்வாறான பின்னணியில் சீனர்கள் 2015 களிலேயே இப்பகுதிகளில் களம்இறக்கப்பட்டுவிட்டதாக இப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். தெற்கிலே பல்வேறு அபிவிருத்திப் பணிகளிலும் சீனர்கள் ஈடுபட்டு வருவது புதிய விடயமல்ல. மீன்பிடித்துறைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மீனவர்களிடையே ஒருவித பயப்பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.ஏற்கனவே மூன்று தீவுகளில் காற்றாலைமூலமான மின்உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளமையும் சர்ச்சைக்குரியதாகவுள்ளது.வடபகுதியில் சீனர்களின் பிரசன்னம் இந்தியாவுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளதுபோலவே படுகிறது.அகவர்கள் கோட்டை விட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்பதில் பயனில்லை.

இதனுடன் தொடர்புடைய நக்டா ( NAQDA ) என்ற நிறுவனம் இத்துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்காற்றி வருவது கவரவேற்கத்தக்கது. மேலும் வினைத்திறனுடன் நக்டா தமது சேவையை இத்துறைசார்ந்து முன்னெடுக்கவேண்டும் என்பது எமது அவா.

வடபகுதியிலிருந்து பெறப்படும் நண்டு,கணவாய், இறால், கடலட்டை,சங்குச் சதை,மட்டி போன்றவைகளின் விலைகள் வெளிச்சந்தைகளில் மிக உயர்ந்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் கடலுணவுகள் சந்தைப்படுத்தல் பொறிமுறையானது அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கி தெற்கு இடைத்தரகர்களே அதிக இலாபத்தை ஈட்டிச்செல்லுகின்ற நிலையயைத் தோற்றுவித்துள்ளது.

வளமிக்க கரையோரப்பகுதிள் உள்ளூர் மீனவர்களால் மட்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் உற்பத்தியாளர்கள் அதன்பலாபலன்களைப் பெறக்கூடியவாறும் சந்தைப்படுத்தல் முறைகள் ஒழுங்கமைக்கப்படுவது அவசியம். ஊழல்மிக்க அரசியல்வாதிகள் மூலமாக தெற்கிலுள்ள அல்லது சீனா போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பண்ணைகள் வழங்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.கடலில் அட்டைகுளிப்பில் ஈடுபட்டு வரும் உள்ளூர் சுழியோடிளிடம் அரசு ஆதரவுபெற்ற அரசியல்வாதிகள் கப்பம் பெற்றே இதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.ஸ்கூபா மூலமான சுழியோடிப்பிடித்தல் தென்பகுதி மீனவர்களுக்கே வரப்பிரசாதமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மீனவர்கூட்டுறவுச்சங்கங்கள் பிரதேச சபைகள் இதில் அக்கறை கொள்வதும் அவசியம்.

 

செயற்கை மீன்பண்ணைகள்

வடக்கில் கைவிடப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பஸ் வண்டிகள் வடபகுதி பாக்கு கடலில்அமிழ்த்தப்பட்டு மீன்வள விருத்திக்காக செயற்கை மீன்வாழிடக் கருவிகளாக உருவாக்கப்படுள்ளதாச் செய்திகள் வந்துள்ளன. மீன்களை ஒருங்கு சேர்க்கும் இந்த செயற்கை உறைவிடங்கள் இப்பகுதி மீன்வள விருத்திக்கு வலு சேர்க்கும் என கடற்றொழில் அமைச்சர் அவர்களால் இந்த அதிரடி முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.உலகின் பல இடங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்த நடவடிக்கையானது இந்திய மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலுக்கு இடைஞ்சலானது என ஆர்ப்பாட்டம் நடாத்தியிருக்கின்றனர்.இந்திய மீனவர்கள் அத்துமீறி வடபகுதி கடலுக்குள் ஊடுருவும் செயற்பாடகளைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது எனலாம். இந்தியா தொடர்ந்தும் மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தவறியே வருகின்றது.சீனர்களின் பிரசன்னத்தை எதிர்மறையாகப் பார்க்கும் இந்தியா முதலில் தமதுநாட்டு மீனவர்களின் அத்துமீறியச் செயற்பாடுகளை நிறுத்துவது நல்லது. ஈழத்தமிழர்களை இந்தியா தொடர்ந்து வதைசெய்வதை நிறுத்த வேண்டுகின்றோம்.

நாட்டுப்படகுகளுக்கான அனுமதி

இதனிடையே இந்திய நாட்டுப்படகுகள் வடபகுதி கடலில் மீன் பிடிக்க அனுமதிப்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாக இருந்து வருகிறது. இத்தகையோர்களுக்கு அனுமதி வழங்ககினால் வடபகுதி மீனவர்கள் தூக்கு கயிற்றில் தொங்கவேண்டிய நிலையே ஏற்படும்.

ஏற்கனவே யுத்தத்தின் தாக்கத்தினால் நொந்துபோய் இருந்த மீனவர்கள் இழுவைமடி மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக சொல்லொணா துயரங்களுக்கும் ஆளாகியிருந்தனர் இவ்வாறான பின்னணியில் நாட்டுப்படகுகளுக்கும் அனுமதி வழங்கப்படுமானால் வடபகுதி மீனவர்கள் மீன்பிடித்தொழிலைக் கைவிட வேண்டியதுதான்.

வகைதொகையின்றி நாட்டுப் படகுகள் நுழைவதினால் வள அழிவு,மீனவர்கள் இடையிலான மோதல்கள்,களவு போன்ற விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகவே இவ்வாறான மீன்பிடி ஒப்பந்தங்கள் செய்துகொள்வது அறிவு பூர்வமான விடயமாக இருக்காது என்பது எமது கருத்து.

எவ்வாறாயினும் வடபகுதி பொருளாதார நடவடிக்கைகளில் பிரதான இடத்தினை வகித்திருந்த கடல்வளத்துறை பல அந்நியச்சக்திகளின் ஆக்கிரமிப்பினால் இன்று சிதைவடந்து போயுள்ளது. இதனை பழைய நிலைக்கு கொண்வருவதற்கான வாய்ப்புக்கள் மந்தமாகவேயுள்ளன.கடல்வளம்சார்ந்த அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு இல்லையேல் இத்துறையில் தங்கிவாழ்வோரின் வாழ்வாதாரம் சீரழிந்து போகலாம்.