எத்தனால் தயாரிப்புக்காக திருப்பிவிடப்பட்ட 30 லட்சம் டன் சர்க்கரை!

25.08.2026 08:34:37

2025 - 2026 உற்பத்தி ஆண்டில் 30 லட்சம் டன் சர்க்கரை, எத்தனால் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம். சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து இருப்பதற்கும் எத்தானால் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமா? என்று கேள்வி எழுந்த நிலையில் இதனை திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துள்ளது. நாடு முழுவதும் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் இருந்து சர்க்கரை விநியோகம் பாதிப்பு, கரும்பு உற்பத்தியில் எல் நினோ ஏற்படுத்திய தாக்கம், பண்டிகை கால தேவை அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

 

தமிழ்நாட்டிலும் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ. 70 ஆக உயர்ந்து உள்ளது. ரூ.50 என்ற அளவில் இருந்த நிலையில் ஒரே அடியாக கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசையாக உள்ள நிலையில் சர்க்கரை விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நம் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இ 20 பெட்ரோலுக்கு கரும்பை மூலப்பொருளாக கொண்ட எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கரும்பு தேவை அதிகரிப்பு காரணமாக சர்க்கரை விலை கூடுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, நம் நாட்டில் 2025-26 சர்க்கரை உற்பத்தி ஆண்டில் 30 லட்சம் டன் சர்க்கரை, எத்தனால் தயாரிக்க திருப்பிவிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் ஆகும். அடுத்த பருவத்தில் இதைக் கட்டுப்படுத்தினால், இதே அளவிலான சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை உள்நாட்டு சந்தைக்கு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

போதிய மழை பெய்யாததால் ஏற்படக்கூடிய சர்க்கரை உற்பத்திக் குறைவை இதனைக்கொண்டு ஈடு செய்ய முடியும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை திருப்பிவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும், தற்போதைய விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோலுக்கும் தொடர்பு இல்லை என்பதே மத்திய அரசு கூறும் தகவலாக உள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்ததைவிட குறைந்ததே சர்க்கரை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சிலர் தரப்பில் கூறும் போது, "பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் முக்கியமான திட்டமாக இருந்தாலும், சர்க்கரை உற்பத்திக்குத்தான் முதலிடம் என்று அரசு தெளிவாகக் கூறியுள்ளது" என்றனர்.