வாக்கெடுப்பு நேரத்தில் தாவலுக்கு வாய்ப்பு?

18.03.2024 07:50:30

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகளும்  ஆளும் தரப்பும் இந்த நாட்களில் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியின் நான்கு முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களை தங்கள் பக்கம் அழைப்பதுதான் ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாகும்.

இதற்கிடையில்? பல எம்.பி.க்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு தமக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அதனை பிரசாரக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளதாக
அறியமுடிகின்றது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வரும் 20ம் திகதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.