கோப்பை வென்றது இலங்கை

08.09.2021 09:12:41

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2–1 என தொடரை கைப்பற்றியது. 

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அசலங்கா (47), சமீரா (29) மட்டும் கைகொடுத்தனர். மற்றவர்கள் கைவிட, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 203 ரன்கள் மட்டும் எடுத்தது. தென் ஆப்ரிக்காவின் கேப்டன் கேஷவ் மஹராஜ் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி, இலங்கை ‘சுழலில்’ சிக்கியது. மலான் (18), கிளாசன் (22), பெலுக்வாயோ (17), லிண்டே (18), மஹராஜ் (15) இரட்டை இலக்க ரன்களை தாண்டினர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 30 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தீக்சனா அதிகபட்சம் 4 விக்கெட் வீழ்த்தினார். 78 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2–1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.