அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர்!
|
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக - பாஜக - பாமக ஓரணியில் இருந்தாலும் கூட அந்த கட்சிகளின் வாக்கு வங்கியாக அறியப்படும் முக்குலத்தோர், பிராமணர், வன்னியர் சமுதாய மக்கள் அப்படியே கிடைக்கும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாமக- பாஜக - அமமுக உள்பட இன்னும் பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்தி எப்படியாவது ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்த கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஐக்கியமாகி உள்ளன. |
|
நேற்றைய தினம் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 17 தொகுதிகள், அமமுவிற்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாமகவால் வன்னியர் ஓட்டுகளும், பாஜகவால் பிராமணர்களின் ஓட்டுகளும், அமமுக - அதிமுகவால் முக்குலத்தோர் ஓட்டுகளும் சிந்தாமல் சிதறாமல் தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்று என்டிஏ கட்சிகள் நினைக்கின்றன. 3 சமுதாய ஓட்டுகள் இங்கு தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பிராமணர்கள், வன்னியர்கள், முக்குலத்தோர் ஓட்டுகள் இந்த முறை அதிமுக - பாஜக கூட்டணிக்கு முழுவதுமாக கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் வன்னியர்கள் ஓட்டுகள் கிடைத்தால் தான் வடமாநிலங்களில் ஜெயிக்க முடியும். முக்குலத்தோர் ஓட்டுகள் கிடைத்தால் தான் டெல்டா மற்றும் மதுரை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் வெல்ல முடியும். பிரமாணர்கள் தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தான் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக உள்ளன. பிற தொகுதிகளில் பரவி குறைந்த அளவில் தான் உள்ளனர். இருப்பினும் அவர்களின் ஓட்டுகளும் தேர்தலில் ரொம்ப முக்கியம். இதில் முதலில் வன்னியர் ஓட்டுகளை எடுத்து கொள்வோம். வன்னியர்கள் வடமாவட்டங்களில் அதிகளிவில் .ள்ளனர். இப்போது பாமக இரண்டு அணியாக உள்ளது. ராமதாஸ் ஒரு அணியாகவும், அன்புமணி இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார். இதில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே பாஜகவில் இணைந்துள்ளார். ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் - சசிகலா கூட்டணி ெ வெற்றி பெறாவிட்டாலும் கூட போட்டியிடும் தொகுதிகளில் கணிசமாக வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது. தொகுதிக்கு சுமார் 5 ஆயிரம் வரை வாக்குகளை பிரித்தால் கூட அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஏனென்றால் ராமதாஸ்க்கான வாக்கு வங்கி வனனியர் சமுதாய மக்கள் தான். அதேபோல் முக்குலத்தோர் சமுதாயத்தை எடுத்து கொண்டால் சசிகலா தற்போது ராமதாஸ் உடன் தனியாக கூட்டணி அமைத்துள்ளார். சசிகலா நிறுத்தும் வேட்பாளர்களும் ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளது. இவரால் டெல்டா மாவட்டங்களில் பின்னடைவு ஏற்படலாம். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் திமுக பலமாக உள்ள நிலையில் சசிகலாவின் செயல்பாடு பிரச்சனையாக மாறலாம். அதேபோல் தென்மாவட்டங்களை எடுத்து கொண்டால் முக்குலத்தோரில் முக்கிய தலைவராக இருக்கும் ஓ பன்னீர் செல்வம் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இவரை வைத்து தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை பெற திமுக திட்டமிட்டு களப்பணியில் இறக்கி உள்ளது. இது இந்த கூட்டணிக்கு மதுரை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகளில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். பிராமணர்கள் ஓட்டுகள் பெரும்பாலும் பிராமணர்களின் ஓட்டுகள் பாஜகவின் வாக்கு வங்கியாக தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுகவில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதிமுக, பாஜகவிலும் அதிகளவில் பிராமணர்களுக்கு சீட் கிடைப்பது இல்லை. இப்படியான சூழலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த முறை 6 பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். இதில் 4 பேர் பெண்கள். 2 பேர் ஆண்கள். சென்னை தி நகரில் அனுஷா, சைதாப்பேட்டையில் ஸ்ரீவித்யா, மயிலாப்பூரில் அருண், ஆலந்தூரில் மகாலட்சுமி, மதுரவாயலில் ரேவதி, மயிலாடுதுறையில் காசிராமன் என 6 பிராமணர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த முறை பல தொகுதிகளில் பிராமணர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு வரும் என்று சீமான் நம்புகிறார். சீமான் நினைப்பது நடக்கும் பட்சத்தில் அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளை பாதிக்கும். ஏனென்றால் பெரும்பான்மையான பிராமணர்களின் முதல் தேர்வாக பாஜக கட்சி தான் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. |