அடுத்து 5 வருடத்திற்கு பிரபாஸ் கடும் வேலை

08.10.2021 15:31:28

'பாகுபலி' படத்தின் மூலம் மற்ற மொழி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என உயர்ந்துவிட்டார் பிரபாஸ். தற்போது அவருடைய சம்பளம் 150 கோடி என்கிறது டோலிவுட் வட்டாரம்.

'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், 'சலார், ஆதி புருஷ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து 'மகாநடி' இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து 'அர்ஜுன் ரெட்டி' இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தையும் அறிவித்துவிட்டார். இந்தப் படங்கள் இல்லாமல் மீண்டும் 'சலார்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தையும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தையும் விரைவில் அறிவிக்க உள்ளாராம்.

இவற்றை எல்லாம் பிரபாஸ் முடித்துக் கொடுக்க 2021 ஆகிவிடும் என்கிறார்கள். முடித்த, நடிக்கும், அறிவித்த, அறிவிக்க உள்ள என 7 படங்கள் கைவசம் உள்ளது பிரபாஸுக்கு. ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் என்றால் அடுத்த நான்கு வருடங்களில் 1050 கோடி சம்பாதித்துவிடுவார்.