3 தொன் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

22.09.2021 03:13:49

இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை, புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில் குறித்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மிகப் பெரிய துறைமுகமான முந்த்ரா துறைமுகம் அமைந்துள்ளது. கட்ச் அரபிக் கடல் பகுதியில் அதிகளவு போதைப் பொருட்கள் கடத்தல், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் என்பன இந்த துறைமுகத்தின் ஊடாக அடிக்கடி இடம்பெற்றுவருகின்றது. கட்ச் கடற்கரை பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் முகாமிட்டிருந்தாலும் அவர்களையும் மீறியதாக இந்த ஊடுருவல்களும் கடத்தல்களும் தொடர்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவு ஹெரோயின் போதைப் பொருட்கள் கொண்ட கண்டெய்னர்கள் முந்த்ரா துறைமுகத்துக்கு கொண்டுவரப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கண்டெய்னர்கள் சிக்கின. ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் உள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட்  என்ற நிறுவனம்  டால்கம் பவுடர் என்ற பெயரில் இந்த 2 கண்டெய்னர்களை ஏற்றுமதி செய்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் நிறுவனம் இதனை இறக்குமதி செய்திருந்தது. இந்த டால்கம் பவுடர் கண்டெய்னர்களை சோதனையிட்ட அதிகாரிகள் 2 கண்டெய்னர்களில் இருந்து மொத்தம் 3 டன் ஹெரோயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். அத்துடன் அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்ட்வி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.