த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு!

27.06.2026 16:19:01

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு அரசின் முக்கிய பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமித்தது ஏன் எனக்கூறி அரசின் இந்த முடிவுக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    

 

இது குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டை சாராத, கர்நாடகாவை சார்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தவெக அரசு நியமித்துள்ளது.

முன்னதாக ஜாதகத்தை கணித்து கூறும் ரத்தன் பண்டிட் என்பவரை தனது ஆலோசகராக நியமித்து, கடும் எதிர்ப்பு எழுந்த பின்னர் நியமனத்தை ரத்து செய்தார்.

அதன் பின்னர் தனது மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை ஆலோசகராகவும், உதவியாளராகவும் நியமித்தார்.

இந்த நியமனங்கள் என்ன சொல்கிறது என்றால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நட்புக்கு இலக்கணமாக இருக்கிறார் என்பது நாட்டு மக்கள் எல்லாருக்கும் தெரிகிறது.

அதேவேளையில், தமிழ்நாட்டின் முதல்வராக வந்துவிட்டால், தமிழ்நாடே தனது அப்பன் வீட்டு சொத்தாக அல்லது தாத்தா வீட்டு சொத்தாக வந்துவிட்டதோ என நினைக்கிறாரோ மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள்..

5 ஆண்டுகளுக்கு தான் மக்கள். அதும் மைனாரிட்டியாக.. 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காக்க்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை ஏதோ சினிமா படத்திலே தன்னோடு பழகியவர்கள் என்ற காரணத்தினாலே அவர்களுக்கு முக்கிய ரோல் தருவதை போல, 8 கோடி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா முதல்வர் விஜய் அவர்களுக்கு?

இப்படி தன்னை வைத்து படம் தயாரித்தவர்கள், தன் படத்தில் நடிப்பவர்களுக்கு மேனேஜர்களாக இருப்பவர்கள், தன் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் அரசுப்பதவி வழங்கிய மாண்புமிகு முதல்வர் விஜய், நட்புக்கும் உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம். ஏனெனில் ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம்" என தெரிவித்துள்ளார்.