” இரண்டு கட்சிகளையுமே தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்” : கமல்ஹாசன்

11.03.2021 09:09:10

”தமிழகத்தில் இருந்து இரண்டு கட்சிகளையுமே அகற்ற வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்கட்டமாக 70 பேரின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ மதவாதம் பேசி தமிழகத்தை பிரித்து,  அரசியல் விளையாட்டு களமாக்கலாம் என  நம்புபவர்கள் ஒரு பக்கம். தமிழ் பண்பாட்டுக்கு நாங்கள் மட்டுமே காவலர்கள் எனக்கூறி  சமூகநீதி என்ற பெயரில்  தங்களை அடையாளப்படுத்துபவர்கள் இன்னொரு பக்கம்.

அவர்களை குற்றம் சாட்டி இது வாரிசு அரசியல் நாங்கள் அதற்கு எதிரானவர்கள். வாய்ப்பு தாருங்கள்’ என அ.தி.மு.க. ஒரு பக்கம்.

இதில் யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. அநீதியை பொறுக்க முடியாமல் எனக்குள்ள கோபத்தால் இந்த கட்சியை உருவாக்கினேன். ஒருமித்த சிந்தனையுடையவர்களும் வந்து சேர்ந்தனர்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 70 பேர் பட்டியலை முதற்கட்டமாக வெளியிடுகிறேன். இவர்கள் என்னை போலவே தமிழகத்தை மீட்க வேண்டிய கனவோடு உள்ளனர். அனைவரும் சுயதொழில் செய்பவர்கள். இன்று துவங்கும் நம் வேலை இலக்கு அடையும் வரை தொடர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.