சர்வதேச அரங்கில் இலங்கையை நிறுத்தமுடியாதுள்ளமைக்கு தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்

02.01.2021 16:13:28

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.

இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி  அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும்  இருந்து அதனை செயற்படுத்தி இருந்தார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேசளவில் செயற்பட்டு, சர்வதேச விசாரணையை கொண்டு வந்தால் மாத்திரமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் தமிழர்களை இங்கு வாழவிடப்போவதில்லை.

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளே தற்போது ஜனநாயக விரோத ஆட்சியை அவர்கள் நடத்துவதற்கு காரணமாக காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.