தமிழர்கள் இனப்படுகொலை கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

23.05.2022 09:00:00

 

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 18ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டரீதியான தாக்கங்கள் கொண்ட இத்தகைய தொழில்நுட்பச் சொற்களை கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், கனடா அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் எவரேனும் அதை அங்கீகரிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களையும் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் பிழையான மற்றும் பக்கச்சார்பான தன்மை மற்றும் அத்தகைய நடத்தையின் விளைவாக இலங்கை தொடர்பில் பொதுவான சூழலில் உருவாகியுள்ள எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் பிழைகளை சரிசெய்வதற்கு கனடா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.