உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இபிஎஸ் வரவேற்பு..!!
பட்டியலின மக்களின் உள் இடஒதுக்கீடு செல்லும்' என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை பெற்றுத் தந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இடஒதுக்கீடு கொள்கையை தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இன்றுவரை பயனடைந்து வருகின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
கழகத்தின் இருபெரும் காவல் தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்கள் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்.ஜி.ஆர்.; 1991-96 ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தைப் பெற்றவர் ஜெயலலிதா.