ஜெயலலிதா மரண விசாரணை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.
ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்துள்ளது.
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறுமுகசாமியின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதையடுத்து விசாரணையில் சூடுபிடிக்க தொடங்கியது. இன்று நடைபெற்ற விசாரணையில், 2016, டிசம்பர் 4-ந்தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்டதாகவும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார்.
இதனிடையே, ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.