ராணுவ தளத்தை கண்காணித்த மர்ம ட்ரோன்!

10.02.2025 07:53:29

ஜேர்மனியில் உக்ரைன் படைகளைப் பயிற்றுவிக்கும் தளத்த்தை மர்ம ட்ரோன் ஒன்று கண்காணித்துள்ளது. ஜேர்மனியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஷ்வெட்சிங்கன் விமான தளத்தில், உக்ரைன் படையினருக்கு பேட்ரியட் ஏவுகணை அமைப்புகள் பயிற்சி அளிக்கப்படும் இடத்தில் மர்மமான ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன.

ஜனவரி 9 முதல் ஜனவரி 29 வரை, ஆறு முறை இது போன்ற கண்காணிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இது ஒரு பெரிய அளவிலான உளவு முயற்சி எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ட்ரோன்கள் சில நிமிடங்கள் ஒளியுடன் மிதந்தன.

அவற்றை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் அல்லது தரையிறக்க நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

ஆறு சம்பவங்களிலும் ட்ரோன் இயக்குபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. விமானப் படை காவல், பொது காவல் மற்றும் இராணுவ உளவுத்துறை இணைந்து தேடுதல் நடத்தின.

ட்ரோன்கள் வடகடல் அல்லது பால்டிக் கடலில் உள்ள கப்பல்களில் இருந்து விடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜேர்மனியின் ராம்‌ஸ்டெயின் உள்ளிட்ட பல இராணுவத் தளங்களில் இதுபோன்ற ட்ரோன் கண்காணிப்பு நிகழ்வுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.

ரஷ்யா, கடந்த சில ஆண்டுகளாக ஜேர்மனியில் உளவு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.