பதவியேற்ற ஓராண்டில் ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு
ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, கடந்த ஆண்டு செப்., மாதம் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஷின்ஜோ அபேயின் அரசில் அமைச்சரவை தலைமை செயலராக இருந்த யோஷிஹைட் சுகா, ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.
யோஷிஹைட் சுகா, ஷின்ஜோ அபேவை போல அரசியல் குடும்பத்தின் வாரிசாக இல்லாமல், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பொது மக்களிடமிருந்து வந்த தலைவராக பார்க்கப்பட்டார்.
பதவிக்கு வந்ததும் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்தது. 70 சதவீத ஜப்பானியர்கள் சுகாவை சிறந்த பிரதமராக ஏற்றனர். ஆனால் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக, தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இப்படி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ளது.
இந்நிலையில் வரும் 29ம் தேதி நடைபெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த மாத இறுதியில் பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.