நிரந்தமான தீர்வொன்றை அடைய பிரித்தானியா வழிவகை செய்ய வேண்டும்

21.01.2022 10:13:46

நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இந்த கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்தார்.

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய கொண்டிருக்கும் கரிசனை மற்றும் அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் சம்பந்தன் நன்றி தெரிவித்தார்.

இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியா ஒன்றாக்கிய பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டார்கள் என்றும் இரா.சம்பந்தன் அவரிடம் எடுத்துரைத்தார்.

ஆகவே இரண்டாக இருந்த நாட்டை ஒன்றாக மாற்றிய பிரித்தானியாவே தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் நீடித்து நிலைத்திருக்க கூடிய நிரந்தமான தீர்வொன்றை அடைய வழிவகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.