இந்தியாவின் MPATGM ஏவுகணை சோதனை வெற்றி!
|
அதிவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் எதிரி நாட்டின் பீரங்கிகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறனுள்ள ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைக்கு மேன்-போர்ட்டபிள் ஆன்டி-டேங்க் கைடட் ஏவுகணையை (MPATGM - Man Portable Anti-Tank Guided Missile) என பெயரிடப்பட்டுள்ளது. |
|
இந்த ஏவுகணையை கொண்டு செல்ல கனரக வாகனங்கள் கூட தேவை இல்லை. ராணுவ வீரர்கள் தங்கள் தோள்களில் வைத்தே எளிதாக கொண்டு செல்லலாம். அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் பீரங்கிகளை தொலைதூரத்தில் இருந்தே வீரர்கள் துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இலக்கை நோக்கி ராணுவ வீரர் இந்த ஏவுகணையை ஏவி விட்டால், அதுவாகவே வெப்ப சென்சார்களை பயன்படுத்தி இலக்கை நோக்கி நகர்ந்து தாக்கிவிடும். பகல் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும், புகை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் கூட இந்த ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும். பொதுவாக பீரங்கிகள் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அதன் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் மிக கடினமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஏவுகணை பீரங்களின் மேல்பகுதியை குறிவைத்து தாக்கும் திறன் உடையது. இது ஏவப்பட்ட உடன் பீரங்கியின் மேல் ஒரு வெடிப்பை மேற்கொண்டு அதன் கவசம் அல்லது வெளிப்புற பாதுகாப்பை உடைக்கும். அதன் பின்னர் 2வது முறை வெடித்து பீரங்கியை முழுவதுமாக அழித்து விடும். இதன் கட்டுப்பட்டு அமைப்பு மூலம், ராணுவ வீரர் இலக்கை அடையாளம் காணவும், இலக்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை அளவிடவும், சுட சிறந்த தருணத்தை தீர்மானிக்கவும் பயன்படுகிறது. சோதனையின் போது, 4 கிமீ தூரத்தில் நகர்ந்து கொண்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதனை முதன்மையாக ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது. சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகம் இதன் போர்முனை செயல்திறனில் பணியாற்றியது. புனேவில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் உந்துவிசை எரிபொருளை உருவாக்கியது. டேராடூனில் உள்ள கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் துல்லிய சென்சார்ளை உருவாக்கியது. விரைவில், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியவை இந்திய ராணுவத்திற்காக அதிக அளவில் இந்த ஏவுகணையை தயாரிக்கும். DRDO குழு மற்றும் இதில் பங்காற்றிய அனைவருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். |