
வடக்கில் வலுக்கும் ஆதரவு.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.
அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம் நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பங்களை பதிவு செய்தனர்.
கிளிநொச்சி
செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் இன்று (30) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி கனகபுரம் வீதி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தமிழரசு மாவட்ட பொது செயலாளர் விஜய பாலன் கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
முதலாம் இணைப்பு
🛑 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வடக்கு - கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நீதி கோரி கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29) காலை முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சுகாஸ், சர்வேஸ்வரன், கஜதீபன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலர் நிகழ்வை ஆரம்பித்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 முல்லைத்தீவு
செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில், குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன்(பவன்), கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், மத தலைவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள் தவராசா அமலன்,தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மாந்தை கிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளர் வரதன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 கிளிநொச்சி
செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் இன்று (29) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
🛑 வவுனியா
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது. தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.
இப்போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.