எரிபொருள் கிடைக்காத ஆதங்கம் ! தீக்கிரையாக்கப்பட்டது நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு

22.05.2022 09:37:40

கெக்கிராவ, இப்பலோகம பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உரிமையாளரின் இப்பலோகம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சிலர் வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிலைய உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டினுள் இருந்ததாகவும், பிரதேசவாசிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  பிள்ளைகளில் ஒருவர், நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், அவரின் பாடசாலை உபகரணங்கள் தீயில் எரிந்துள்ளதாகவும், வீட்டிற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.