"வல்லரசுகளின் கல்லறை"

17.08.2021 10:48:26

 

காபூல் நகரத்தைக் கைப்பற்றி தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும் அண்டை நாடுகள் அனைத்தும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கின்றன.

ஆனால் சீனாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தாலிபன்களுடன் நட்புறவை விரும்புவதாக அந்த நாடு அறிவித்திருக்கிறது. இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஒரு மாதத்துக்கு முன்பே தாலிபன்களின் அரசியல் பிரிவு தலைவர் சீனாவுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து வந்தார்.

தனது அண்டை நாட்டில் இருந்து மேற்குலக நாடுகளின் படைகள் திடீரென புறப்பட்டுச் சென்றிருப்பது ஒரு வகையில் சீனாவுக்கு மகிழ்ச்சியளிக்கவே செய்யும். ஆனால் அமெரிக்கா புறப்படுச் சென்றுவிட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனேயே சீனா செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல ஆப்கானிஸ்தானுக்குச் சென்று சீனா ஒருபோதும் சண்டையிட்டதில்லை. ஆனால் சுமார் 70 கிலோ மீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

மிகமிகக் குறைந்த நீளம் கொண்ட எல்லைதான் இது. ஆனாலும் இது சீனாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதி ஜின்ஜியாங் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் அமைந்திருக்கிறது. இது வீகர் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி.

வீட்டு வாசலுக்கு அருகே ஓர் அடிப்படைவாத ஆட்சி தோன்றியிருப்பது உள்நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற கவலை சீனாவுக்கு இருக்கிறது.

ஏனென்றால் உள்நாட்டில் வீகர் இஸ்லாமியர்கள் பிரச்னை எப்போதும் புகைந்து கொண்டே இருக்கிறது. அருகே தாலிபன்கள் இருப்பது இதை மேலும் சிக்கலாக்கக்கூடும்.

சீனாவின் அரசு ஊடகங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றிக் குறிப்பிடும்போது "வல்லரசுகளின் கல்லறை" என்று கூறுகின்றன. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைப் பின்பற்றி படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கம் கூறுகிறது.