மாவை சேனாதிராஜா,சத்தியலிங்கம் ஆகியோருக்கு பகிரங்க அழைப்பானை !

24.05.2022 03:24:28

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இனை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் (20) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 03.06.2022 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணையானது யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் மட்டும் அழைப்பானையை 28.04.2022 அன்று பெற்றிந்தார். அவர் 06.05.2022 அன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தார். ஆனால் 20.05.2022 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற கட்டளையை இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று வரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அவர்களுக்கு பகிரங்க அழைப்பானை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.