சம்பந்தன் போன்ற ஆளுமையான அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை!

08.03.2021 15:58:25

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து கொண்டனர்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளினால் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் தமிழ்த்தேசிய அரசியல்போக்கினை மீள கட்டியெழுப்புதல், திருகோணமலையில் தமிழர்களின் இருப்பினை பாதுகாத்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது எதிர்காலத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

தொடர்ந்து சந்திப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.