ஐக்கிய மக்கள் சக்தியில் 3இல்2 பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையவுள்ளனர்!

13.03.2024 15:26:26

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டு பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்ற கருத்து தற்போது நாடுபூராகவும் பரவி வருகிறது.
கடந்த கால தேர்தல்களை ஆராய்ந்து பார்த்தால், 2020 பொதுத தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் தொகை 22 இலட்சமாகும். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டவர்களில் பலர் தற்போது மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ள கலந்துரையாடி வருகின்றனர்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டுபேர் எம்முடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 55இலட்சம் வாக்குகளை பெற்றார்.
அது நூற்றுக்கு 41 வீதமாகும்.

அதேநேரம் பொதுத தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 27 இலட்சம் வாக்குகளே கிடைத்தது.
அது நூற்றுக்கு 23வீதமாகும். அதாவது 41 வீதத்தில் இருந்து 23வீதத்துக்கு குறைவடைந்தது. ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க நாங்கள் பிரேரித்திருக்கிறோம்.

அவர் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார். சுமார் 40 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களமிறங்குகிறார். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமாகும் என்பதை நாட்டில் இருக்கும் படித்த, உயர் மட்டத்தினர் உணர்ந்து வருகின்றனர். அதனால் மீண்டும் நாட்டுக்கு பரீட்சித்துப்பாக்கும் தலைவர் தேவையில்லை” இவ்வாறு ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.