சுவிட்சர்லாந்தின் Zug ஏரியில் கசிந்த 100 லிட்டர் எண்ணெய்!

19.11.2025 14:01:47

இராணுவ பயிற்சியின் போது சுவிட்சர்லாந்தின் Zug ஏரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் Zug ஏரியில் சுமார் 100 லிட்டர் எண்ணெய் கசிந்ததை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துப்புரவு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த எதிர்பாராத சம்பவமானது சுவிஸ் இராணுவத்தின் வழக்கமான பயிற்சியின் போது ஏற்பட்டுள்ளது.

Zug மாகாணத்தின் சட்ட அமலாக்க அதிகாரி வழங்கிய தகவலில், ஏரியில் கசிந்த எண்ணெயானது மக்கும் தன்மை கொண்டது என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், சுவிஸ் இராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக Zug ஏரியில் இருந்து ஹைட்ராலிக் பம்ப் ஒன்றை பயன்படுத்தி வீரர்கள் தண்ணீரை வெளியே எடுத்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென பம்பில் அழுத்தம் குறைந்த போது ஏரியில் எண்ணெய் கசிந்து இருப்பதை கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கசிவை தொடர்ந்து, விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் ஏரியின் மேல்பரப்பில் மேலும் எண்ணெய் பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்த தடுப்பரண்கள் அமைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரிய வராத நிலையில், இராணுவ மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.