கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவித்தல் !

22.05.2022 09:39:02

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது. பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் அரச தலைவர் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒவ்வொரு மாதமும் 21ம் திகதி வர்த்தமானி வெளியிடப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நேற்றிரவுடன் நீக்கப்பட்டதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அரச தலைவர்கோட்டாபய ராஜபக்ச கடந்த 6ம் திகதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.