திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈழ உறவுகள் !

21.05.2022 09:23:11

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தமிழர் தாயகப் பகுதியில் இருந்து நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் பல அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியாவின் தமிழ் நாட்டிற்குச் சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும் ஈழ உறவுகள் தம்மை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரியே குறித்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலர் பல வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டு காலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

நீண்ட காலமாக விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட உண்ணாவிரதம் இருக்கு உறவுகள், தாம் நீண்ட காலமாக சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.